மந்த்ராலயம்: வெங்கண்ணாவை மாற்றிய ராகவேந்திரர்
இது கொரோனா காலம் என்பதால் கோவிலுக்குள் நுழைய முகக்கவசம் கட்டாயம் தேவை. உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்பே உள்ளே அனுமதிக்கிறார்கள்.
கோவிலுக்குள் நுழைந்ததும் பரவச உணர்வு ஏற்படுகிறது. வெளியில் இருந்த பரபரப்பு உள்ளே இல்லை. நிசப்பதமாக இருந்தது. கூட்டமும் குறைவாக இருந்தது.
ராகவேந்திரர் சுவாமிகள் கோவிலுக்குள் நுழைந்ததும் பரவச உணர்வு ஏற்படுகிறது. வெளியில் இருந்த பரபரப்பு உள்ளே இல்லை. நிசப்பதமாக இருந்தது. கூட்டமும் குறைவாக இருந்தது.
உள்ளே நுழைந்ததும் பெரிய பிரகாரம். குரு ராகவேந்திரரை வலம் வருவதுபோல் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் சுவர்களில் ராகவேந்திரர் நிகழ்த்திய பல அற்புதங்கள் ஓவியங்களாக தீட்டப்பட்டிருக்கின்றன.
புரந்தரதாசர்
குரு ராகவேந்திரசுவாமிகள் நடுவில் வீற்றிருக்க அவரைச் சுற்றி புரந்தரதாசர் உள்ளிட்ட இசை விற்பன்னர்கள் இசை கச்சேரி நிகழ்த்துவது போன்று தீட்டப்பட்டிருக்கும் ஓவியம் மனதைக் கவர்கிறது.
இந்தக் கோவிலில் வேஷ்டி கட்டி செல்பவர்களுக்கு தனி மரியாதை கிடைக்கிறது. மேலாடை இல்லாமல் செல்லும் ஆண்களுக்கும் சேலை அணிந்த பெண்களுக்கும் இன்னும் கூடுதல் மரியாதை கிடைக்கிறது.
நாங்கள் வேஷ்டி அணிந்து சென்றதால் விரைவாக சன்னதிக்குள் செல்ல அனுமதிக்க பட்டோம். உள்ளே நிறைய நபர்கள் வரிசையில் நிற்கும் விதமாக வளைந்து வளைந்து சென்றது.
கூட்டம் குறைவாக இருந்தாலும் இந்த ஜிக்ஜாக் பாதையில் வளைந்து வளைந்து தான் செல்லவேண்டும்.
ராகவேந்திரருக்கு எதிரே உள்ள கல்லில் தரிசனம் தரும் அனுமனையும் அதன் அருகில் இருக்கும் சிவலிங்கத்தையும் தரிசனம் செய்தோம்.
குருநாதருக்கு எதிரே உள்ள இந்த ஹனுமன் ராமர் கிஷ்கிந்தா செல்லும் போது அமர்ந்த கல் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் இது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
மாதவரம்
ராகவேந்திரரின் பிருந்தாவனத்திற்கு பிறகு எஞ்சிய கல்லில் இந்த விக்ரகம் அவரின் விருப்பபடி உருவாக்கி அவர் எதிரிலேயே பிரதிஷ்டை செய்யப்பெற்றது.
இக்கல்லின் ஒரு சிறு பகுதி இன்னும் மாதவரம் கிராமத்தில் உள்ளது அதை இராமராக கருதி அங்குள்ள மக்கள் வழிபட்டு வருகின்றனர். அதன்பின் பிருந்தாவனத்தில் குடிகொண்டிருக்கும் குரு ராகவேந்திரரை மனமுருக வணங்கினோம்.

அவருக்கு இடப்பக்கம் இருக்கும் வாதீந்திர தீர்த்தரின் பிருந்தாவனத்தையும் தரிசனம் செய்தோம். தரிசனம் முடிந்து வெளியே வந்ததும் நமக்கான பிரசாதம் கொடுத்தார்கள்.
பிருந்தாவனத்தை சுற்றி இருக்கும் இந்த பிரகாரத்தில் பக்தர்கள் அங்கபிரதட்சணம் செய்கிறார்கள். யாகசாலை உள்ளது.
தினமும் பிரமாண்டமான அளவில் அன்னதானம் நடைபெறுகிறது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் இறைவனின் அருட் பிரசாதமாக உண்டு மகிழ்கிறார்கள்.
வறட்சியுடன் காணப்படும் இந்த இடத்தை ராகவேந்தர் விருப்பப்பட்ட இடம் என்று சென்ற பதிவில் கண்டோம். இந்த இடம் கிடைத்த கதை மிக சுவாரசியமானது.
ராகவேந்திரர் நிகழ்த்திய இந்த அற்புதம் அவரின் கருணையை காட்டுகிறது. அந்த சம்பவம் இதுதான்.
வெங்கண்ணா
மந்திராலயத்திற்கு அருகிலுள்ள ஊர் அதோனி. அந்த ஊரில் வெங்கண்ணா என்ற பிராமண சிறுவன் குழந்தைப் பருவத்திலேயே தாய் தந்தையை இழந்து தனது தாய் மாமனிடம் வளர்ந்தான்.
அந்த சிறுவனின் சொத்தை அபகரிப்பதிலேயே மாமன் குறியாக இருந்தான்.
சரியாக உணவு அளிக்காமல் மாடுகளை மேய்த்து வரும் வேலையை அந்த சிறுவனுக்கு தாய் மாமன் வழங்கினான். தனது விதியை நொந்து கொண்டு மாடு மேய்த்து, கிடைத்த மீந்துபோன சோற்றை சாப்பிட்டு வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் இப்படி மாடு மேய்த்துக்கொண்டிருந்த போது அந்த வழியாக ஒரு சந்நியாசி தனது சீடர்களுடன் சென்று கொண்டிருந்தார்.
என்னை நினைத்துக்கொள்
ஒளிபொருந்திய அந்த மஹானை கண்டதும் சிறுவனின் கண்களில் கண்ணீர் பெருகியது.
ஓடிச்சென்று மகானின் காலில் விழுந்து கதறினான். காலில் விழுந்த அந்த சிறுவனை கைத்தாங்கலாக தூக்கி, பரிவுடன் பார்த்த அந்த மகான் அவனது கதையைக் கேட்டார்.
கதையை முழுமையாக கேட்ட மகான் அவனுக்கு ஆசிர்வாதம் வழங்கி மந்திர அக்ஷதையை சொல்லிக்கொடுத்தார்.
‘உனக்கு இன்னல் வரும்போது என்னை நினைத்துக்கொள். நான் உன்னை காப்பாற்றுவேன்.’ என்று அருளாசி கொடுத்தார்.
அந்த மகான் வேறு யாருமல்ல. மந்திராலய மகான் குரு ராகவேந்திரர் தான்.
பல வருடங்கள் ஓடின. சிறுவன் இளைஞானான்.
-தொடரும்

ஆசிரியர் பற்றி..
இவர் பத்திரிக்கையாளர், எழுத்தாளர், பயணக் கட்டுரையாளர், வலைப்பதிவர், யூட்யூபர் என பன் முகங்கள் கொண்டவர். இவர் எழுதிய ‘நம்பமுடியாத உண்மைகள்’ புத்தகத்தை ‘தினத்தந்தி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது. வார இதழ்களிலும் இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.