தன் மகனின் எதிர்காலத்திற்காக நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோதும் தலைகீழாகத் தொங்கிய ஒரு உன்னத தாயைப் பற்றி இங்கு பார்ப்போம்.
சோழ மன்னன் சுபதேவன், தன் மனைவி கமலவதியுடன் பெரும் பற்றப்புலியூர், பொன்னம்பலம், சிற்சபை, சிற்றம்பலம், சிதம்பரம் என்றெல்லாம் அழைக்கப்படும் தில்லைக்குச் சென்றான்.
அங்கு அவர்கள் தங்களுக்கு நல்ல மகப்பேறு வேண்டி, “உலகெலாம் உணர்ந்து ஓதுதற்கு அரிய” தில்லைச் சிற்றம்பலவரை மனம் மொழி மெய்களால் வழிபட்டனர்.
அதன் பயனாகத் திருவானைக்காவில் வெண்நாவலின் கீழ் எழுந்தருளிய சிவபெருமானுக்குப் பந்தர் இழைத்து (பந்தல் அமைத்து) வழிபட்ட சிலந்தி கமலவதியின் கருவினுள் மகவாய் வளர்ந்தது. நிறைமாத கர்ப்பிணி யானாள் அரசி.
ஒரு நாழிகை
கமலவதி குழந்தையைப் பெற்றெடுக்கும் நாளும் நேரமும் வந்தன. அப்போது “இன்னும் ஒரு நாழிகை (24 நிமிடம்) கழித்துக் குழந்தை பிறந்தால் மூன்று உலகையும் ஆளும்” என்று ஒரு கணியன் (சோதிடர்) கூறினார்.
அது கேட்ட அரசி கமலவதி “அந்த ஒரு நாழிகைப் பொழுதுவரை என் கால்களைப் பிணித்துத் தலைகீழாக நிறுத்துங்கள்” என்றாள். அப்படியே செய்யப்பட்டது.
கணியன் குறித்தபடி ஒரு நாழிகை கழித்து ஆண் குழந்தை பிறந்தது. கூடுதலாக ஒரு நாழிகைப் பொழுது கருப்பை வாயிலேயே இருந்த அந்தக் குழந்தையின் கண்கள் சிவந்து காணப்பட்டன.
ஈன்றவளோ, தன் குழந்தையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தாள். குழந்தையைத் தாக்கி அணைத்து உச்சி மோந்தாள். ‘என் மகன் கோச்செங்கணானோ’ என்று அன்போடு கொஞ்சினாள்.
அதுவே அவன் பெயரானது. அதேநேரம், குழந்தையைக் கருவில் சுமந்து தலைகீழாக கூடுதலாக ஒரு நாழிகைப் பொழுது இருந்ததால் சிறிது நேரத்தில் தாயின் உயிர் பிரிந்தது.
கோச்செங்கட்சோழன்
சோழ மன்னன் சுபதேவன், குழந்தையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து முடிசூட்டினான். கோச்செங்கட்சோழன் பல நாடுகளை வென்று சோழப்பேரரசனாக விளங்கினான்.
சிவபெருமானின் பேரருளால் தம் முந்தைய பிறப்பின் (சிலந்தி) உணர்வோடு திருவானைக்காவல் பெருமானுக்குப் பெருங்கோயில் அமைத்து வழிபட்டான்.
சோழநாட்டில் சிவபெருமானுக்கு மட்டும் எழுபது மாடக் கோயில்கள் கட்டி, கோச்செங்கட் சோழ நாயனார் ஆனான். இவை தவிர திருநறையூரில் திருமாலுக்கு மணிமாடக் கோயில் ஒன்று எழுப்பினான் எனத் திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
சோழநாட்டில் சிவபெருமானுக்கு மட்டும் எழுபது மாடக் கோயில்கள் கட்டி, கோச்செங்கட் சோழ நாயனார் ஆனான். இவை தவிர திருநறையூரில் திருமாலுக்கு மணிமாடக் கோயில் ஒன்று எழுப்பினான் எனத் திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.
நாயன்மார்
கோச்செங்கட் சோழன், தில்லைத் திருச்சிற்றம்பலம் பெருமானை வணங்கித் தில்லைவாழ் அந்தணர்களுக்குத் தங்கும் மனைகள் கட்டிக் கொடுத்தார். இறுதியில் தில்லையம்பலப் பெருமான் திருவடிகளையே பெரும் பேரின்பம் வீடுபேறு எய்தினார்.
இதனால் கோச்செங்கச் சோழன் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் உயர்ந்து சைவத் திருக்கோயில்களில் இடம் பெற்றார்.
“ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்.”
-குறள் (69)

மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டியில் பிறந்த இவர். அங்குள்ள காந்திநிகேதன் ஆசிரமத்தில் கல்வி பயின்றவர். காந்திய நெறியில் ஈடுபாடு கொண்டவர். தினத்தந்தி நாளிதழில் பொறுப்பாசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இலக்கிய எழுத்திலும் கவிதையிலும் ஈடுபாடு கொண்ட இவர் எழுதிய ‘நெஞ்சில் விழுந்த நெருப்பு விதைகள்’ என்ற கவிதை தொகுப்பு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் பாராட்டுப் பெற்றது. தொடர்ந்து பல இலக்கிய ஆக்கங்களை எழுதிவருகிறார்.