Queen Cleopatra
கிளியோபாட்ரா தப்பி ஓட்டம்! பதினெட்டு வயதிலேயே நாட்டின் பேரரசியாக பதவியேற்றாலும் திறம்படச் செயல்பட்டாள் கிளியோபாட்ரா.
அவளுக்கு ஆலோசனை சொல்லத் திறமை வாய்ந்த அமைச்சர்கள் பலரும் இருந்தனர். முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அவர்களைக் கலந்து ஆலோசித்த பின்னரே எடுத்தாள்.
இதனால், கிளியோபாட்ராவின் எகிப்தியப் பேரரசில் இருந்த அமைச்சர்களும் தனிச் செல்வாக்குடன் திகழ்ந்தனர்.
நாட்டின் அரசனும், கிளியோபாட்ராவின் கணவனும், உடன் பிறந்த தம்பியுமான 13-ம் டாலமிக்கு 12 வயதே ஆகியிருந்ததால் அவனது நடவடிக்கைகளில் சிறு பிள்ளைத்தனங்களே தொடர்ந்தன.
திறம்பட ஆட்சி புரிந்த கிளியோபாட்ரா, எதிரிகளை அடக்குவதிலும் கைதேர்ந்தவளாக இருந்தாள். கி.மு.க்களில் எகிப்துப் பேரரசானது மேலை எகிப்து, கீழை எகிப்து என்று இரு பகுதிகளாக இருந்தது.
மேலை எகிப்தில் வாழ்ந்த பூர்வீகக் குடிகள் அவ்வப்போது ஆட்சியாளர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்களது போராட்டத்தை அடக்குவது சிரமத்திற்குரிய வேலையாக இருந்தது.
பேரரசியாகப் பதவியேற்ற கிளியோபாட்ரா, அந்த பிரச்சினைக்கு முழுத் தீர்வு காண வேண்டும் என்று எண்ணினாள். தனது அமைச்சர்களிடம் கலந்து ஆலோசித்தாள்.
பூர்வீகக் குடிகளை வலுக்கட்டாயமாக அடக்குவதுதான் நல்லது என்று ஆலோசனை சொன்னார்கள் அமைச்சர்கள். ஆனால், கிளியோபாட்ராவுக்கு அதில் உடன்பாடு இல்லை.
சொந்த மண்ணில் பிறந்தவர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள் என்றால், அதில் நியாயமான காரணம் இருக்க வேண்டும் என்று கருதினாள். அதுபற்றி தனது அமைச்சர்களிடம் பேசுவதைவிட, நேரடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் பேசுவதே சிறந்தது என்பது அவளது முடிவாக இருந்தது.
அடுத்த சில நாட்களிலேயே மேலை எகிப்துக்குப் பயணமானாள். பல மொழித் திறன் பெற்றிருந்த அவளுக்கு மேலை எகிப்திய பூர்வீகக் குடிகள் பேசும் மொழியும் தெரிந்திருந்தது. அவர்களிடம் சில மணி நேரம் பேசினாள்.
இந்தப் பேச்சில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. கிளர்ச்சி செய்வதைக் கைவிடுவதாகக் கூறிய பூர்வீகக் குடிகள், சில கோரிக்கைகளை முன் வைத்தனர். அந்தக் கோரிக்கைகள், அவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதாக இருந்ததால், அவற்றை நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்தாள் கிளியோபாட்ரா.
இதன் மூலம் மேலை எகிப்திய பூர்வீகக் குடிகளுக்கும், ஆட்சியாளர்களுக்கும் இடையே இருந்து வந்த நீண்ட நாளைய பிரச்சினை முடிவுக்கு வந்தது. பூர்வீகக் குடிகள் கிளியோபாட்ராவைத் தங்களது பேரரசியாக ஏற்றுக்கொண்டனர்.
மேலை எகிப்து பூர்வீகக் குடிகள் போன்று எகிப்தின் பூர்வீக நகரங்களான தீப்ஸ், ஹெர்மன்திஸ் ஆகிய நகரங்களில் வசித்து வந்த புரோகிதர்களும் சிலநேரங்களில் எகிப்துப் பேரரசுக்கு ‘தண்ணி’ காட்டி வந்தனர்.
காரணம், அவர்கள் அந்தப் பகுதியில் அதிகாரப் பலம் பெற்று திகழ்ந்ததுதான். இவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி, சுமூக முடிவை ஏற்படுத்தினாள் கிளியோபாட்ரா.
இப்படி, தனது பேரரசுக்குள் எதிரிகள் யாரும் இல்லாத நிலையைக் கொண்டு வந்தாள் அவள். அவளது ஆட்சி தொடர்ந்தது.
முன்பு, மாவீரன் அலெக்ஸாண்டர் எகிப்தைக் கைப்பற்றியபோது தன்னை மாசிடோனிய ஆதி தெய்வமான அம்மானின் மகன் என்று பிரகடனப்படுத்திக் கொண்டார். அவரது தாக்கம் கிளியோபாட்ராவிடமும் எதிரொலித்தது. இவள் தன்னை, எகிப்தின் ஆதி தெய்வமான ரேயின் மகள் என்று அறிவித்தாள்.
அந்தக் காலத்தில் ஆட்சியாளர்கள் தெய்வங்களின் அம்சமாகவும், அவர்களின் பிரதிநிதிகளாகவும் பார்க்கப்பட்டதால், கிளியோபாட்ராவின் அறிவிப்பு ஏகபோகமாக ஏற்கப்பட்டது.
ஹெர்மன்திஸ் நகரில் உள்ள டென்டிரா என்ற இடத்தில் ஒரு கோவிலையும் ஏற்படுத்தினாள் கிளியோபாட்ரா. அந்த கோவிலில் ஹதர் என்ற தெய்வத்தின் தோற்றத்தில் தனது உருவச்சிலையையும் வைக்க உத்தரவிட்டாள். கூடிய விரைவில், அவளது உருவச்சிலையும் அங்கு வைக்கப்பட்டு, அவள் ஒரு தெய்வமாகவே மக்களால் வழிபடப்பட்டாள்.
கி.மு.48ல் கிளியோபாட்ரா ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருந்தது. அவளும் 21 வயதை அடைந்த கன்னிப் பெண்ணாகத் திகழ்ந்தாள். எந்தவித பிரச்சினைகளும் இல்லாமல் அவளது ஆட்சியின் நாட்கள் நகர்ந்தன. அதன்பிறகுதான் அவளுக்கு பிரச்சினையே ஆரம்பித்தது.
கணவனும், தம்பியும், நாட்டின் அரசனும் ஆன 13-ம் டாலமியிடம் இருந்தே பிரச்சினை வந்தது.
அப்போது 13-ம் டாலமிக்கு 15 வயதே ஆகி இருந்ததால், அவனை படைத்தளபதியாக இருந்த அச்சிலெஸ், சிறந்த மேடைப் பேச்சாளனான தியோடோடஸ் மற்றும் பொதினஸ் (இவன் ஓர் அரவாணி) ஆகியோர் அடங்கிய குழு தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டது.
‘கிளியோபாட்ராவை விரட்டியடித்தால், நாடு முழுவதும் உனக்கே உனக்காகிவிடும்’ என்று ஆசைவார்த்தை காட்டித் தூண்டில் போட்டனர் அவர்கள். சிறுவன் 13-ம் டாலமியும் அதை நம்பி அக்காளும், மனைவியும், நாட்டின் பேரரசியுமான கிளியோபாட்ராவைத் துரத்தியடிக்க சம்மதித்தான்.
‘கிளியோபாட்ராவை விரட்டியடித்தால், நாடு முழுவதும் உனக்கே உனக்காகிவிடும்’ என்று ஆசைவார்த்தை காட்டித் தூண்டில் போட்டனர் அவர்கள். சிறுவன் 13-ம் டாலமியும் அதை நம்பி அக்காளும், மனைவியும், நாட்டின் பேரரசியுமான கிளியோபாட்ராவைத் துரத்தியடிக்க சம்மதித்தான்.
கிளியோபாட்ராவை நாட்டை விட்டு விரட்டும் நோக்குடன் கிளர்ச்சி தூண்டிவிடப்பட்டது. அப்போதே நாட்டு மக்கள் எதிர்பார்க்காத ஓர் உத்தரவை வெளியிட்டான் 13-ம் டாலமி.
‘கிளியோபாட்ராவின் பதவி பறிக்கப்பட்டது’ என்பதுதான் அந்த உத்தரவு. கூடவே, கிளர்ச்சியும் ஏற்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிளர்ச்சியாளர்கள் அட்டகாசத்தில் இறங்கினார்கள். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
தனக்கு எதிராக ஏவிவிடப்பட்ட இந்த அடக்குமுறையால், அதுவரை பயத்தை அறியாத கிளியோபாட்ரா முதன் முதலாக பயந்தாள்.
இந்த நேரத்தில் அரண்மனைக்குச் சென்றால் தன்னை யார் வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்று எண்ணிய அவள், அடைக்கலம் தேடி பயணித்தாள். அவளுக்கு மிகவும் வேண்டிய சிலர் மட்டுமே அப்போது அவளுடன் இருந்தனர்.
இந்த நேரத்தில் அரண்மனைக்குச் சென்றால் தன்னை யார் வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்று எண்ணிய அவள், அடைக்கலம் தேடி பயணித்தாள். அவளுக்கு மிகவும் வேண்டிய சிலர் மட்டுமே அப்போது அவளுடன் இருந்தனர்.
எகிப்தின் புராதனத் தலைநகராகத் திகழ்ந்த தீப்ஸ் சென்ற கிளியோபாட்ரா, அங்கு இருந்தபடியே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தனது ஆதரவாளர்களுடன் அவசரமாக ஆலோசித்தாள்.
எலூசியம் என்ற இடத்திற்குக் கிழக்கு பகுதியில் வாழ்ந்து வந்த அரேபியப் பூர்வீகக் குடிகள் அவளுக்கு உதவ முன்வந்தனர். அவர்களைக் கொண்டு ஒரு படையைத் திரட்டினாள் கிளியோபாட்ரா. ஆனால், அந்த படை அவளுக்கு போதுமானதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், கிளியோபாட்ரா தீப்ஸில் இருப்பதாகக் கேள்விப்பட்ட 13-ம் டாலமி, அவளைக் கொலை செய்ய ஒரு படையை அங்கு அனுப்பினான். பயந்துபோன கிளியோபாட்ரா சிரியா நாட்டிற்குத் தப்பிச்சென்றாள்.
-தொடரும்
பத்திரிகை ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான ‘நவரசு’ நெல்லை விவேகநந்தா, திருநெல்வேலி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். 2012ம் ஆண்டு, தமிழக அரசு வழங்கும் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலாசிரியர் விருது, வீரத்துறவி விவேகானந்தர் விருது உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.
தங்கப் படுக்கையில் பரிதாப முடிவு! கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவைத் தடுக்க அவளது அறைக்கு… Read More
கிளியோபாட்ராவின் தற்கொலை முடிவு! தற்கொலை செய்துகொள்வது என்ற உறுதியான முடிவுக்கு வந்த கிளியோபாட்ரா,… Read More
ஆக்டேவியன் அதிர்ச்சி கட்டளை பீதியோடு விடிந்த அன்றைய தினம் கிளியோபாட்ராவுக்கு அடுத்தடுத்துப் பல… Read More
புரொக்கியூலிஸ் வருகை கிளியோபாட்ரா தற்கொலை முயற்சி ஆண்டனியின் மறைவு கிளியோபாட்ராவை மிகுந்த சோகத்திற்கு… Read More
ஆண்டனியின் மறைவும், கிளியோபாட்ரா கதறலும்... எகிப்தின் கொலைக்களக் கூடத்தில் தற்கொலை செய்து கொண்டதாக… Read More
கிளியோபாட்ரா ஆண்டனியின் பரிதாப முடிவு! “கிளியோபாட்ரா இறந்து விட்டாளா? எனக்கே எனக்காக வாழ்ந்து… Read More